சென்னை: மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம், தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். எனவே காலியான எம்பி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனையடுத்து தவெகவின் முதல் எம்பி யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
காலியான ஒரு தொகுதிக்கு, ஜூன் 18 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் 8 வரை நடைபெறும். ஜூன் 9 அன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப் பெற ஜூன் 11 கடைசி நாளாகும்.
தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் மொத்தம் 24 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு ஜூன் 18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் யாருக்கு வாய்ப்பு தமிழகத்தை பொறுத்தவரை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 107 இடங்களை வென்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவை சேர்த்தால் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு இருக்கிறது. எனவே, இந்த தேர்தலில் தவெகவை சேர்ந்தவர் எம்பியாக வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்-க்கு அரசு பதவி கொடுக்கப்பட்டு, கடும் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டதால் அவருக்கு எம்பி பதவி கொடுக்க விஜய் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தவிர காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியும் எம்பி பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். ஆனால், இதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
ர்நாடகாவில் தேர்தல் கர்நாடகாவை பொறுத்தவரை ம.ஜ.த.வின் தேவகவுடா, காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க.வின் நாராயண கொரகப்பா மற்றும் ஈரண்ணா கடாடி ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 25 அன்று முடிவடைகிறது. எனவே 4 எம்பி பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. தற்போதைய சட்டப்பேரவை பலத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மூன்று இடங்களையும் பா.ஜ.க. ஒரு இடத்தையும் எளிதாக வெல்லும் நிலை உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு (ம.ஜ.த.) வெறும் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் தனியாக வெற்றி பெற முடியாது. தேவகவுடாவை பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைத்து ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், தேவகவுடா அல்லது மத்திய அமைச்சர் குமாரசாமி பா.ஜ.க.-வுடன் இதுவரை பேசவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.க.-வின் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேவகவுடாவை கூட்டணி சார்பில் நிறுத்தலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
மறுபுறம் புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை அமைக்கும் பணிகளில் மூழ்கியுள்ள காங்கிரஸ் தனது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றாலும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் தலைமை விரும்பினாலும் அவர் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.