டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது உள்பட போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நாளை நாடு முழுவதும் போராட்டத்தை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இதனால் நாளை டெல்லி மட்டுமின்றி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடும் அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதில், ''நாளை (ஜூலை 24)நாடு தழுவிய ளவில் அமைதியான போராட்டம் ஒவ்வொரு மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது. ஒருநாள் - ஒரு கோரிக்கை என்ற அடிப்படையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியா முழுவதும் போலீசாரின் கொடூர தாக்குதக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் நடவடிக்கையை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மாணவர் அமைப்பினர் மற்றும் பிற அமைப்பினர்அனைவரும் சேர்ந்து அனுமதி பெற்று இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும். போராட்டத்தில் மாணவர்களின் கோரிக்கையை வலுவாக உரைக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். www.cockroachjantaparty.com/protests-101 என்ற பக்கத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்பாணை (Memorandum Template) உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இந்த போராட்டம் அறிவிப்பு தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கடந்த 20ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி அறிவித்தபோது ஏராளமானவர்கள் பங்கேற்றனர். போலீசார் தடியடி நடத்தினர். அதன்பிறகும் கூட பல அமைப்பினர் தன்னெழுச்சியாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியே போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்கலாம் என்பதால் ஏதேனும் அசம்பாவித சம்வங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க தொடங்கி உள்ளன. இது பரபரப்பையும், பதற்றத்தையும் எடுத்துள்ளது.